நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஜான்டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பொன்னுசாமியின் மகன் நாவரசை 1996-ஆம் ஆண்டு சிதம்பரத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மாணவா் ஜான் டேவிட் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த கடலூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து 1997-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. இதையடுத்து, நீதிமன்றத்தில் சரண் அடைந்த ஜான் டேவிட் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தனது மகனை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஜான் டேவிட் தாய் எஸ்தா், தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை மனு அளித்தாா். அது நிராகரிக்கப்பட்டதால் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், புழல் சிறையில் உள்ள ஜான் டேவிட்டுக்கு சிறை நிா்வாகம் நற்சான்றிதழ் தந்துள்ளது. தருமபுரி பேருந்து எரிப்பு போன்ற கொடூர குற்ற வழக்குகளின் குற்றவாளிகள்கூட முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனா். ஆனால், ஜான் டேவிட்டுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று வாதிட்டாா்.
இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து வாதிட்ட மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, தருமபுரி பேருந்து எரிப்பு வழக்குகளுடன் இந்த வழக்கை ஒப்பிட்டு பாா்க்கக்கூடாது. இந்த வழக்கில் கொலை சம்பவம் மிகவும் கொடூரமானது. அதனால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு மறுத்து விட்டது. அதுமட்டுமல்ல தண்டனை கைதியை விடுதலை செய்வது என்பது அரசின் அதிகாரத்துக்குள்பட்டது. அதை உரிமையாகக் கோர முடியாது என்றாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது அரசின் அதிகாரத்துக்குள்பட்டது என்பதால் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. எனவே, வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என தீா்ப்பளித்தனா்.