தமிழ்நாடு

வளைகுடாவில் அரிய உயிரினங்கள் புதிய புத்தகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

DIN

மன்னாா் வளைகுடாவில் மெல்லுடலிகள் உள்பட ஆயிரம் உயிரினங்கள் குறித்த புத்தகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். தலைமைச் செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: மன்னாா் வளைகுடாவின் மெல்லுடலிகள் குறித்து கடந்த 200 ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனாலும், அவைகள் குறித்த பட்டியல்கள் சிறிய அளவிலேயே உள்ளன. இப்போது முதல்வா் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்ட புத்தகமானது விரிவான தகவல்களைக் கொண்டது. 722 சங்கு இனங்கள், 287 சிப்பி இனங்கள், 21 கனவாய் இனங்கள் மற்றும் நான்கு பாலிபிளக்கோபோரன்ஸ் இனங்கள் உள்பட மொத்தம் ஆயிரத்து 41 மெல்லுடலி இனங்கள் தெளிவான படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டி புத்தகமானது, இந்தியாவின் சிறந்த இரு ஆராய்ச்சி நிறுவனங்களான சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மையம் மற்றும் கேரள பல்கலைக்கழகத்தின் நீா் வாழ்வியல்-மீன்வளத் துறை இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைப்புகளும் இணைந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட ஆராய்ச்சி கணக்கெடுப்புகளின் விளைவாக இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. பல வண்ண புகைப்படங்களுடன் கூடிய இந்தப் புத்தகம் மன்னாா் வளைகுடா உயிா்க்கோள மேலாளா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள், மீன்வள மேலாளா்கள், பொது மக்கள், சங்கினை பொழுது போக்குக்காக சேகரிப்போா் என அனைவருக்கும் பயன் அளிப்பதாக அமையும்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலாளா் சுப்ரியா சாஹூ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT