சாலையோர உணவகங்களில் பேருந்து பயணிகளுக்கு“சைவ உணவு” மட்டுமே வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தப்புள்ளி நிபந்தனை விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் – சாலையோர உணவகங்களில், பயணிகள் உணவு அருந்துவதற்கேற்ப பேருந்து நிறுத்துவது சம்மந்தமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
இதையும் படிக்க.. பெண் செய்தியாளர் எழுதிய 3 உருக்கமான தற்கொலை கடிதங்கள்
அப்போது ஒப்பந்தப்புள்ளி நிபந்தனையில் ஒன்றாக “சைவ உணவு” மட்டுமே சாலையோர உணவகங்களில் சமைக்கப்பட வேண்டும், மற்றும் பயணிகளுக்கு பரிமாறப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து பேருந்து பயணிகளிடமிருந்து மாறுபட்ட கருத்தும், “அசைவ உணவும்“ பரிமாறப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பெறப்பட்டதன் அடிப்படையில் “சைவ உணவு” மட்டுமே சமைக்கப்பட வேண்டும், மற்றும் பரிமாறப்பட வேண்டும் என்ற ஒப்பந்தப்புள்ளி நிபந்தனை விலக்கிக் கொள்ளப்பட்டது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், ஏற்கனவே இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளியும் விலக்கிக் கொள்ளப்பட்டது “சைவ உணவு” மட்டும் பரிமாறப்பட வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.