கோவா முதல்வராக பதவியேற்றுள்ள பிரமோத் சாவந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
40 இடங்களைக் கொண்ட கோவா சட்டப் பேரவைத் தேர்தலில், 20 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
கோவா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்றார். முதல்வா் பிரமோத் மற்றும் 8 அமைச்சா்களுக்கு ஆளுநர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பனாஜி அருகேயுள்ள சியாமா பிரசாத் முகா்ஜி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்தியப் பிரதேசம், ஹரியாணா, கர்நாடகம், உத்தரகண்ட் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வராகப் பதவியேற்றுள்ள பிரமோத் சாவந்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து கூறியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'இரண்டாவது முறையாக கோவா முதல்வராகியுள்ள பிரமோத் சாவந்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கோவா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவருக்கு என் வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.