முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரம்: கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்ற தலைமைச் செயலர் வெ. இறையன்பு

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுவீரப்பட்டு மற்றும் சோமங்கலம் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு,கலந்து கொண்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
பகிர்:

மே 1 தொழிலாளர் நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுவீரப்பட்டு மற்றும் சோமங்கலம் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு,கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டங்களில், ஊராட்சிகளின் 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், கிராம ஊராட்சிகள் தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கடந்த நிதி ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்தி பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பெரிய பதாகை மூலம் வரவு, செலவு கணக்கு (படிவம் 30-இன் சுருக்கம்) வைக்கப்பட்டிருந்தது. கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் போது உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டது. இச்சிறப்புக் கிராமசபைக் கூட்டங்களில் கூட்டப் பொருட்கள் ஊராட்சி மன்ற செயலர்களால் படிக்கப்பட்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

Advertisement

அதனைத் தொடர்ந்து, மே 1 தொழிலாளர் நாளை முன்னிட்டு ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் ஆகியோரைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் சால்வை அணிவித்துக் கௌரவித்தனர். இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பி.ஸ்ரீதேவி, நடுவீரப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, துணைத் தலைவர் ஞானமணி சகாயராஜ், சோமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆரிக்கியம் ஜெயபால், துணைத் தலைவர் திருமதி பவானி ஞானசேகர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments