தமிழகததில் மதவெறி அரசியலுக்குத் துளியும் இடம் கொடுக்கக் கூடாது என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஜூன் 3, கருணாநிதின் 99-ஆவது பிறந்தநாள். அன்றைய தினம் தமிழகமெங்கும் எழுச்சியோடும் ஏற்றத்தோடும் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட வேண்டும் என்று நேற்று காலையில் (மே 28) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் இருவண்ணக் கொடி ஏற்றும் விழாக்கள் ஆகியவை மாவட்ட அளவில் தொடங்கி கிளைகள் தோறும் நடத்தப்பட வேண்டும். ஒரு நாளோடு முடிந்துவிடுவதில்லை நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள். அவர் நிறைவேற்றிய சிறந்த திட்டங்களையும், அவர் கற்றுத் தந்த ஆட்சிக்கான இலக்கணத்தின்படி தொடர்கின்ற 'திராவிடல் மாடல்' அரசின் கடந்த ஓராண்டு கால சாதனைகளையும் மக்களிடம் ஒவ்வொரு நாளும் எடுத்துச் சென்றிட வேண்டும்.
கட்சியின் இளைய தலைமுறையினரின் நெஞ்சில் அவற்றை பதியச் செய்திட வேண்டும். அடுத்த ஆண்டு (2023) ஜூன் 3-ஆம் நாள் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா. அதற்கு முன்னதாக, கருணாநிதியின் 99-ஆவது பிறந்த ஆண்டில் கட்சியின் சார்பில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தகவல்தொழில்நுட்ப அணி உள்ளிட்ட துணை அமைப்புகளைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள்’ நடத்தப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைதி தவழும் சமூகநீதி நிலமான தமிழ்நாட்டில் மதவெறி அரசியலுக்குத் துளியும் இடம் கொடுக்காத வகையில், சுயமரியாதை உணர்வையும் சமத்துவச் சிந்தனையையும் மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் விதத்தில் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் அமைந்திட வேண்டும்.
உங்களில் ஒருவனான எனது தலைமையில் அமைந்துள்ள, அனைத்து மக்களுக்குமான நமது அரசின் சாதனைகளும் திட்டங்களும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேர்ந்திடும் வகையில் உடன்பிறப்புகளாம் உங்களின் உழைப்பு அமைந்திட வேண்டும். மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நான் வலியுறுத்தியவாறு, கட்சித் தொண்டர்களை நிர்வாகிகள் அரவணைத்து உதவிகள் செய்திட வேண்டும். ‘உடன்பிறப்பே’ என்று கருணாநிதி நம்மை
அழைத்ததற்கேற்ப கட்‘சி எனும் பெருங்குடும்பத்தின் உறுப்பினர்களாக - கொள்கை உறவுகளாகத் திகழ்ந்திட வேண்டும். உயிர்நிகர் கருணாதியைப் போல திராவிட இயக்க உணர்வுடன் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளம் பெற்றிட ஓயாது உழைத்திடுவோம். கருணாநிதி புகழ் முழங்கிடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.