முகப்பு
தமிழ்நாடு

எல்ஐசியை பாதுகாக்க கோரி முகவர்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசிஐ பாதுகாக்க கோரி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் ஈரோடு காளை மாட்டு சிலை அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:50 AM
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசிஐ பாதுகாக்க கோரி ஈரோடு காளை மாட்டு சிலை அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர்.
பகிர்:


ஈரோடு: பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி-ஐ பாதுகாக்க கோரி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் ஈரோடு காளை மாட்டு சிலை அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த கோவை மண்டல எல்ஐசி முகவர்கள் சங்க தலைவர் குமணன் கூறியதாவது:

இந்தியா முழுவதும் 13 லட்சம் முகவர்கள் உள்ளனர். மொத்த காப்பீடு வர்த்தகத்தில் 70% எல்ஐசியின் பங்கு எல்ஐசி இன் அபரிதமான வளர்ச்சிக்கு முகவர்களே காரணமாகும். ஆனால். காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஐர்டிஏ) பீமா சுகம் என்ற புதிய கொள்கையை வகுத்துள்ளது. அதன்படி மக்கள் ஆன்லைன் மூலம் காப்பீடு பெறலாம். எல்ஐசி முகவர் இனி எந்த தனியார் நிறுவனத்தின் சார்பாக பணியாற்றலாம். ஒரு முகவரிடம் பாலிசி பெற்று பிறகு வேறு முகவரிடம் சேவை பெறலாம். மேலும் பல்வேறு எல்ஐசியின் வளர்ச்சிக்கு எதிரான கொள்கைகளை ஆணையம் வகுத்துள்ளது. 

தற்பொழுது பாலிசிதாரர்களுக்கு முகவர்கள் சிறப்பான சேவை புரிந்து வருகின்றனர். உதாரணத்திற்கு இறப்பு ஏற்படும் போது அலுவலகத்தை அணுகி இழப்பீட்டுத் தொகை பெற்று தருகின்றனர். ஆன்லைன் மூலம் பாலிசி பெற்ற பெரும்பாலோர் உரிய சேவை பெற முடியாது. எல்ஐசி முகவர் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்காக பணிபுரிந்தால் அந்நிறுவனங்கள் முகவர்களுக்கு அதிக ஊக்கத்தொகை கொடுக்கும். நாளடைவில் எல்ஐசி இன் வர்த்தகம் குறையும். எனவே, இந்த பீமா சுகம் என்ற கொள்கை எல்ஐசி-ஐ நசுக்கவே பயன்படும். எவ்வாறு பிஎஸ்என்எல் நிறுவனம் தற்பொழுது தனியார் நிறுவனங்களின் தாக்கத்தாலும் அரசின் ஒத்துழைப்பின்மையாலும் நலிவுற்றுள்ளது போல் எல்ஐசி-ம் எதிர்காலத்தின் நலிவுறும். அதனால் கோடிக்கணக்கான பாலிசிதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். எல்ஐசி மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு கிடைக்கும் நிதி பாதிக்கப்படும். எனவே அக்கொள்கை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் 30 தேதி ஹைதராபாத்தில் உள்ள ஐஆர்டிஏ அலுவலகம் முன்பு முகவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. 543 எம்.பி.,- களுக்கும் இது சம்பந்தமாக கடிதம் கொடுத்துள்ளோம்.

வரும் 16 ஆம் தேதி முதல் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் இந்த பிரச்னை குறித்து பேசுவதாக உறுதி அளித்துள்ளனர். ஏற்கனவே, எல்ஐசி பங்குகள் விற்கப்பட்டன. ரூ. 2 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும் என்றார்கள். அதையும் குறைத்து ரூ.20 ஆயிரம் கோடிக்கு பங்குகளை விற்றார்கள். முதலில் ஒரு பங்கு ரூ.5000 என்றார்கள், பிறகு ரூ.940-க்கு விற்றார்கள். அந்த பங்கின் மதிப்பு தற்போது ரூ.600. எல்ஐசி இல் ப்ரீமியம் மீது கூட நாலரை சதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. பாலிசிதாரர்கள் கடன் வாங்கினால் ஒன்பது சதவீதம் வட்டி. அந்த வட்டியின் மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இவைகள் எல்லாம் பாலிசிதாரர்களை பாதிக்கிறது. 

கடந்த மாதம் 20 ஆம் தேதி பீமா சுகம் கொள்கையை அரசு அமலாக்க திட்டமிட்டது எங்கள் போராட்டம் காரணமாக அதை ஒத்தி வைத்துள்ளார்கள். பாலிசிதாரர்களின் நலன் கருதி நிரந்தரமாக அக்கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடைபெறுகிறது என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.