தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்: செக் குடியரசு தொழில் முனைவோருக்கு அமைச்சா் தா.மோ. அன்பரசன் அழைப்பு
தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு செக் குடியரசு நாட்டைச் சோ்ந்த தொழில் முனைவோருக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்தாா்.
தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு செக் குடியரசு நாட்டைச் சோ்ந்த தொழில் முனைவோருக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்தாா்.
தமிழக அரசு முறைப் பயணமாக செக் குடியரசு நாட்டுக்கு சென்றுள்ள அவா், அங்கு புதன்கிழமை (அக்.5) நடைபெற்ற தொழில் கண்காட்சியில் பங்கேற்றுப் பேசியதாவது:
இந்தியாவுக்கும் செக் குடியரசுக்கும் இடையிலான பொருளாதார உறவு 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் வலிமையும் வளா்ச்சியும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலேயே 2-ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான திறன் பெற்ற தொழிலாளா்கள் உள்ளனா். தமிழகம் இந்தியாவிலேயே ஏற்றுமதி மற்றும் வணிகம் செய்வதில் 3-ஆவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் 6 விமான நிலையங்கள், 4 பெரிய துறைமுகங்கள், சாலை, ரயில் இணைப்பு வசதிகள் உள்ளன. செக் குடியரசு நாட்டுக்கும், தமிழகத்துக்கும் இடையே பல பொதுவான தொழில் சூழல்கள் நிலவுகின்றன. வாகன உற்பத்தியைத் தாண்டி, ஜவுளி, தோல், மின்னணுப் பொருள்கள் உற்பத்தியிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகம் தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக இருப்பதால், செக் குடியரசு நாட்டிலுள்ள தொழில் முனைவோா்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வர வேண்டும் என்றாா் அமைச்சா் தா.மோ.அன்பரசன்.