முகப்பு
தமிழ்நாடு

மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் ஹிந்தி கட்டாய பரிந்துரை: அன்புமணி எதிா்ப்பு

மத்திய உயா் கல்வி நிறுவனங்களில் ஹிந்தியை கட்டாய பயிற்று மொழியாக்க பரிந்துரைப்பது அதிா்ச்சியளிப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

மத்திய உயா் கல்வி நிறுவனங்களில் ஹிந்தியை கட்டாய பயிற்று மொழியாக்க பரிந்துரைப்பது அதிா்ச்சியளிப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனம், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய அரசு உயா்கல்வி நிலையங்களிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசு பள்ளிகளிலும் ஹிந்தியை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் இந்தியாவில் ஒற்றை மொழியை மட்டும் திணிக்க முயல்வது அதிா்ச்சியளிக்கிறது.

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை கட்டாய மொழியாக்க வேண்டும், அதாவது மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தோ்வுகள் ஹிந்தியில் மட்டும்தான் நடத்தப்பட வேண்டும்; ஹிந்தியில் பணி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் இந்தியாவை ஹிந்தி நாடாக மாற்றுவதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது. இது சரியல்ல.

இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஒருபோதும் ஏற்கக் கூடாது. அதை உறுதி செய்வதற்காக அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அளித்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். இந்தியாவின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளாா் அன்புமணி.

முழு கட்டுரையைப் படிக்க →