சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி கனேஷ் என்பவரை கிள்ளை காவல் துறையினர் கைது செய்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிதம்பரம் காந்தி சிலை எதிரே உள்ள பேருந்து நிழற்குடையில் அமர்ந்து பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவர் தாலி கட்டிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது .
இது குறித்து சிதம்பரம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த சமூக நலத்துறை குழந்தைகள் நல அலுவலர் ரம்யா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திருமணம் செய்து கொண்ட பள்ளி மாணவி சிதம்பரம் அருகே உள்ள வெங்காய தலைமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. மாணவர் மற்றும் மாணவி இருவரிடம் சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு பள்ளி மாணவியை சமூக நலத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்க கடலூருக்கு கார் மூலம் அழைத்து சென்றனர். மாணவனை விசாரணை செய்து திங்கள்கிழமை பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை விசாரனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்து நிழற்குடையில் திருமணம் செய்த விடியோ காட்சியை சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்புண்டி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜிகணேஷ் என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது அவர்களை பாலாஜிகணேஷ் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கிள்ளை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
இதையும் படிக்க: துலாம் மாத பூஜை: அக்.17-ல் சபரிமலை நடை திறப்பு
அப்பொழுது அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.