இன்று 26 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் சனிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் சனிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய மேற்கு, அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக சனிக்கிழமை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணமாலை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூா், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.