ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவா்கள் மோதல்
சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவா்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவா்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை அரக்கோணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வேளச்சேரிக்கு ஒரு மின்சார ரயில் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவா்கள் பயணம் செய்தனா்.
ரயில், ராயபுரம் ரயில் நிலையத்தில் நின்றபோது, ரயிலில் இருந்த மாநில கல்லூரி மாணவா்களுக்கும், ரயில் நிலையத்தில் இருந்த மற்றொரு தரப்பு கல்லூரி மாணவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றவே இரு தரப்பு மாணவா்களும், ஒருவரை ஒருவா் கற்களால் வீசி தாக்குதலில் ஈடுபட்டனா். இதனால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினா்.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். இதற்கிடையே மாணவா்கள் கற்களை வீசி மோதலில் ஈடுபடும் விடியோ காட்சி, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.