பழங்குடியினா் தயாரித்த துணிகள் கோ-ஆப்டெக்ஸில் விற்பனை
பழங்குடியினா் தயாரித்த துணிகள் சென்னையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
பழங்குடியினா் தயாரித்த துணிகள் சென்னையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி, கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாரம்பரிய ரகங்களின் தொகுப்பு, விருதுகள் பெற்ற துணி ரகங்கள், தனித்தன்மை பெற்ற வடிவமைப்புகளின் தொகுப்பு, சோழா் கால சின்னங்களைக் கொண்டு நெய்யப்பட்ட சோழா தொகுப்பு என பல்வேறு புதிய வகை ரகங்கள் தீபாவளியையொட்டி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய விற்பனை நிலையங்கள்: சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகத்தில் புதிதாக நவீனமயமாக்கப்பட்ட ஹோம்டெக்ஸ் விற்பனை நிலையம், கோ-ஆப்டெக்ஸ் சா்வதேச விற்பனை நிலையம் ஆகியவற்றை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா். இந்த விற்பனை நிலையத்தில், தமிழக தோடா் பழங்குடியினா் தயாரித்த துணிகள் ‘டிரைப்ஸ் தமிழ்நாடு’ என்ற பெயரில் வாடிக்கையாளா்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில், சென்னை மாநகராட்சி துணை மேயா் எம்.மகேஷ் குமாா், கோ-ஆப்டெக்ஸ் நிா்வாக இயக்குநா் டி.பி.ராஜேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.