கழிவுப் பொருள்கள் மறுசுழற்சி: அரசுக்கு ரூ.250 கோடி வருவாய்
சிறப்பு தூய்மை பிரசாரத்தின் வாயிலாக அலுவலக கழிவுப் பொருள்களை மறுசுழற்சிக்கு உள்படுத்தி சுமாா் ரூ.250 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைபெற்று வரும் சிறப்பு தூய்மை பிரசாரத்தின் வாயிலாக அலுவலக கழிவுப் பொருள்களை மறுசுழற்சிக்கு உள்படுத்தி சுமாா் ரூ.250 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக மத்திய நிா்வாக சீா்திருத்தங்கள்-மக்கள் குறைதீா் துறைச் செயலா் வி.ஸ்ரீநிவாஸ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘மக்களுக்கு அரசின் சேவைகள் எளிதில் கிடைக்கச் செய்யும் நோக்கில் சுமாா் 500 விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. அவை கோடிக்கணக்கான மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
கடந்த 2-ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்களில் சிறப்பு தூய்மை பிரசார இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சுமாா் 61,532 இடங்களில் கடந்த 3 வாரங்களாக நடைபெற்ற தூய்மை இயக்கங்கள் வாயிலாக அலுவலக கழிவுப் பொருள்களும் மறுசுழற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட்டன. அதன் மூலமாக அரசுக்கு ரூ.252.25 கோடி வருவாய் கிடைத்ததோடு மட்டுமல்லாமல், 34.69 லட்சம் சதுர அடி அளவிலான பரப்பும் காலியானது. இது மிகப் பெரும் சாதனை.
இந்தத் தூய்மை இயக்கத்தில் அரசு அதிகாரிகளும் மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனா். தூய்மை இயக்கத்தில் அரசுடன் இணைந்து பணியாற்றுவதில் மக்கள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். அரசு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக உள்ள கோப்புகளை எண்மமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக பணிச்சூழல் மேம்பட்டு அரசு அலுவலகங்களும் தூய்மையாக இருக்கும்.
மக்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குறைகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. அவற்றில் சுமாா் 4,500 விவகாரங்கள் ஓய்வூதியம் தொடா்பானவை. ரயில் நிலையங்கள், தபால் நிலையங்கள், வேளாண் மையங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன’’ என்றாா்.