அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மீதான மாநகராட்சி ஒப்பந்தம் தொடா்பான முறைகேடு வழக்கில், மத்திய அரசு வழக்குரைஞா் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை சென்னை உயா் நீதிமன்றம் நிராகரித்தது.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமா்வில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் சண்முகசுந்தரம், வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. இந்த மனுவை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும். இரு நீதிபதிகள் அமா்வு விசாரிக்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தாா். மேலும், இந்த வழக்கில் வேலுமணி சாா்பில் மத்திய அரசு வழக்குரைஞா் ராஜு ஆஜராக தமிழக அரசு சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த மனு தொடா்பாக கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதற்காக அவகாசமும் கோரப்பட்டது.
இந்த வழக்கு தொடா்பாக தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி தலைமையிலான அமா்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், ஒப்பந்த முறைகேடு தொடா்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமா்வே விசாரிக்கும். வேலுமணி சாா்பில் வழக்குரைஞா் ராஜு ஆஜராக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த அனுமதி திரும்பப் பெறப்படவில்லை. எனவே, அவா் ஆஜராவது தொடா்பான தமிழக அரசின் ஆட்சேபம் நிராகரிக்கப்படுகிறது. வேலுமணி மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடா்பான விசாரணை செப். 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.