தந்தையின் மெழுகுச் சிலை முன்பாக திருமணம் செய்துகொண்ட மகன்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்! (விடியோ)
சேலத்தில் தந்தையின் மெழுகு சிலை முன்பாக மகன் திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சேலம்: சேலத்தில் தந்தையின் மெழுகுச் சிலை முன்பாக மகன் திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சேலம் குகை பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், புஷ்பராணி தம்பதியருக்கு ஆரோக்கிய இயேசுராஜா என்ற மகனும், ராசிகா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்டு பன்னீர்செல்வம் உயிரிழந்தார்.
இவர் இறப்பதற்கு முன்பாகவே மகள் ராசிகாவுக்கு திருமணம் முடித்துவிட்ட நிலையில் மகனுக்கு விமரிசையாக திருமணம் நடத்த வேண்டும் என்ற ஆசையுடன் அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளார். ஆனால், கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து ஆரோக்கிய இயேசுராஜா, தந்தை முன்னிலையில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக பெங்களூருவில் மெழுகுச் சிலை தயாரிக்கும் நிறுவனத்தில் தந்தையின் உருவ மெழுகுச் சிலையை தயாரித்து இன்று நடைபெற்ற திருமண விழாவில் தந்தை முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.
தந்தையின் மீது வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக தந்தையின் மெழுகுச் சிலை முன்பு திருமணம் செய்துகொண்ட மகனை நினைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.