புதுச்சேரி: சர்வதேச கடற்கரை தூய்மை நாளையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் தூய்மைப் பணி நடைபெற்றது.
புதுச்சேரியில் சனிக்கிழமை காலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில், சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் முன்னிலையில் கடற்கரை காந்தி சிலை அருகே பிரம்மாண்ட தூய்மைப் பணி நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி 'சுத்தமான கடற்கரை பாதுகாப்பான கடல்' என்ற பிரசாரம் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டு 75 நாட்களில், இந்திய கடற்கரையின் 7,500 கிலோ மீட்டர் தூரம் சுத்தம் செய்யப்பட்டு, சர்வதேச கடற்கரை தூய்மை நாளான இன்று வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி நடைபெற்ற கடற்கரை தூய்மைப் பணியில் மாவட்ட ஆட்சியர் வல்லவன், காவல்துறை தலைவர் மனோஜ் குமார் லால், அறிவியல் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மிதா, இந்திய கடலோர காவல் படை, தேசிய சேவை திட்ட மாணவர்கள் மற்றும் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லூரி பள்ளி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டு, கடற்கரையினை சுத்தம் செய்தனர்.