பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல், உடல் சோா்வு இருந்ததால் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சென்றாா். மருத்துவா்களின் ஆலோசனையின்படி, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அவருக்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை குறித்து மா. சுப்பிரமணியன் கூறியதாவது:
அன்பில் மகேஷுக்கு எச்1என்1 என்ற இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமாக இருக்கிறார். சிகிச்சைக்கு பிறகு இன்னும் இரண்டு நாள்களில் வீடு திரும்புவார் என்றார்.