செங்கல்பட்டு இரட்டைக் கொலை வழக்கு: ரெளடிகள் இருவர் என்கவுன்ட்டரில் பலி
செங்கல்பட்டு இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவரை காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
செங்கல்பட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் இருவரை காவல்துறையினர் தற்காப்புக்காக என்கவுண்டரில் துப்பாக்கியால் சுட்டதில் வெள்ளிக்கிழமை பலியாகினர்.
செங்கல்பட்டில் வியாழக்கிழமை இரவு காய்கறி வியாபாரிகளான கார்த்திக் மற்றும் மகேஷ் ஆகிய இருவரை இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவானது.
இக்கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக செங்கல்பட்டு எஸ்பி அரவிந்தன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஒளிந்திருக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினரும் இரவு பகலாக தேடிவந்தனர்.
Advertisement
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனம் பகுதியில் பதுங்கி இருந்ததாக மாதவன் என்பவரையும் ஜெசிகா என்ற பெண்ணையும் போலீசார் முதலில் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் கொலையில் தொடர்புடைய இருவர் செங்கல்பட்டு காட்டுப்பகுதியில் ஒளிந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றபோது மறைந்திருந்த குற்றவாளிகள் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசத் தொடங்கினர்.
இதனால் தற்காப்புக்காக போலீசார் அவர்களை நோக்கி சுட்டதில் பிஸ்கட் என்ற மொய்தீன், தீனா என்ற தினேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.காஞ்சிபுரம் சரக டி.ஜ.ஜி ம.சத்தியப்பிரியா, செங்கல்பட்டு எஸ் பி அரவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இருவரது உடல்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இரட்டை கொலையில் தொடர்புடைய இருவரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதும், இருவர் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவங்கள் தொடர்பாக செங்கல்பட்டு நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது