முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை!

பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியதால், கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
போராட்டக்களத்தில் காவல் துறை
பகிர்:


பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியதால், கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் அறிவுறுத்தலின்படி உள்துறை செயலாளர், காவல் துறை டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டம் நடைபெற்ற சின்னசேலம் பகுதிக்கு விரைந்துள்ளனர்.  

மற்ற மாவட்டங்களிலிருந்து அதிரவி விரைவுப் படையை சேர்ந்த 500 பேர் கள்ளக்குறிச்சி வந்துள்ளனர். அவர்கள் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். தற்போது பள்ளி வளாகம் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அமைதி நடவடிக்கை தொடர்வதாகவும் அதிரடிப் படை தெரிவித்துள்ளது.

மேலும், போராட்டம் நடைபெற்ற இடங்களில் காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாா் பள்ளியில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக, அவரது உறவினா்கள், பொதுமக்கள் கடந்த 5 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதில், போராட்டக்காரர்கள் கற்களை வீசி பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளி வளாகத்தில் இருந்த பேருந்துகளை டிராக்டர் கொண்டு இடித்து நொறுக்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சூழ்ந்து பள்ளிப் பேருந்தை கவிழ்த்தனர். மேலும் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல் துறை வாகனங்களையும் தீயிட்டு எரித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.