பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை நீக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழல் மற்றும் முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ள பேராசிரியர் தங்கவேலுவை பதிவாளர் பொறுப்பிலிருந்து நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழல் மற்றும் முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ள பேராசிரியர் தங்கவேலுவை பதிவாளர் பொறுப்பிலிருந்து நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய அறவழிப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியநாதன் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது? என்று விளக்கமளிக்கக் கோரி அவருக்கு பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் தங்கவேலு குறிப்பாணை அனுப்பியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
பல்கலைக்கழக பேராசிரியர் என்ற முறையில் வைத்தியநாதன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை; பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் கலந்து கொண்டுள்ளார். தொழிற்சங்க விதிகள் மற்றும் உரிமைகளின்படி இதில் எந்த தவறும் இல்லை. இதை அறிந்திருந்தும் அவருக்கு குறிப்பாணை அனுப்புவது அப்பட்டமான பழிவாங்கும் செயல்!
Advertisement
Advertisement
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசே விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. அந்த விசாரணைக் குழு முன் அரசுத் தரப்புசாட்சியாக பேராசிரியர் வைத்தியநாதன் சாட்சியளிக்க உள்ளார். அதைத் தடுக்கும் நோக்குடன் அச்சுறுத்துவதற்காகவே அவருக்கு குறிப்பாணை வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
தமிழக அரசால் பட்டியலிடப்பட்டுள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழல் மற்றும் முறைகேடுகளில் பேராசிரியர் தங்கவேலு சம்பந்தப்பட்டுள்ளார். அப்படிப்பட்டவரை பொறுப்பு பதிவாளராக நியமித்தது தவறு. அவரது பழி வாங்கலை அனுமதிப்பது அதைவிட பெரும் தவறு. எனவே பேராசிரியர் வைத்தியநாதனுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணையை திரும்பப் பெறவும் பழிவாங்கும் நோக்கில் செயல்படும் பேராசிரியர் தங்கவேலுவை பதிவாளர் பொறுப்பிலிருந்து நீக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.