புதுக்கோட்டை: தமிழில் பெயர்ப் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழில் பெயர்ப் பலகை வைக்காத கடைகள், வணிக நிறுவனங்கள் மீது தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் துறையும் அவ்வப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த நடவடிக்கை தொடரும்.
அதேபோல, தமிழில் கையொப்பமிடாத அரசுத் துறை அலுவலர்கள் குறித்தும், கோப்புகள் வரும்போதே அவ்வப்போது உயர் அலுவலர்கள் அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள். அந்த நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
திருச்சி, மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனை வழங்கப்பட்டு பிறகு, அரசால் அந்தப் பட்டா ரத்து செய்யப்பட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் வருவாய்த் துறையினருடன் இணைந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் வாக்குறுதியாக தெரிவிக்கப்பட்ட பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு அலுவல் சாரா உறுப்பினர்களாக மூத்த பத்திரிகையாளர்கள் நியமிக்கப்பட்டு 3 கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து வரும் கோரிக்கைகள் குறித்து அந்தக் கூட்டங்களில் வைத்து முதல்வரிடம் கலந்து பேசி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுக்கோட்டையில் ராஜா ராஜகோபால தொண்டைமானுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.