வாழப்பாடி அருகே பைக் மீது வேன் மோதியதில் ஒருவர் பலி
வாழப்பாடி அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் பலியானர். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
வாழப்பாடி: வாழப்பாடி அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் பலியானர். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே செவ்வாய்க்கிழமை காலை சபரிமலைக்கு சென்ற வேன் பைக் மீது மோதிய விபத்தில், பைக்கில் சென்ற தனியார் பள்ளி ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சென்றாயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (67). அதே பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றிவந்த இவரும், பேருந்து உதவியாளரான இவரது நண்பர் சித்தைய்யன் (71) இருவரும் வாழப்பாடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி பேருந்தில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக செவ்வாய்க்கிழமை காலை சென்றாயன்பாளையத்திலிருந்து, ஒரே பைக்கில் வாழப்பாடிக்கு சென்றனர்.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி -புதுப்பாளையம் அருகே சென்ற போது, திருத்தணியில் இருந்து சபரிமலை செல்வதற்காக வந்த வேன், இவர்களது பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கிய சுந்தரராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சித்தைய்யன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.