மக்களுக்கு தேவையான கட்டமைப்புகளை வழங்கி ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே அரசின் அடிப்படை நோக்கம் என்று மத்திய பெட்ரோல், இயற்கை, எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு காணொலி மூலம் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு 3.06 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தேவையான கட்டமைப்புகளை வழங்கி ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே எங்களது அடிப்படை நோக்கம். உலகளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவும் நிலையில், வேகமாக பொருளாதார வளர்ச்சி அடையும் நாடாக இந்தியா உள்ளது.
இந்தியா வளர்ச்சிடைந்தால், உலகம் வளர்ச்சியடையும். இந்தியாவின் வளர்ச்சியடைந்த நிலையை கல்வி பிரதிபலிக்க வேண்டும். இளைஞர்கள் நாளைய தலைவர்கள்.
இந்தியாவின் இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் அல்ல, வேலை அளிப்பவர்களாக உள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பலமுறை கூறியுள்ளார். 2014 முதல் தொடங்கப்பட்டு வரும் புதிய தொழில் நிறுவனங்கள்(ஸ்டார்ட்-அப்) இந்திய கல்வியின் பரிணாமத்தை பிரதிபலிக்கின்றது.
தேசிய கல்விக் கொள்கையானது கடைகோடி குழந்தைகளையும் அடையும் வகையில் உள்ளதாக தெரிவித்தார்.