பேனா நினைவுச் சின்னத்துக்கு எத்தனை பேர் ஆதரவு?
கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தமிழக அரசு இன்று (பிப். 20) தெரிவித்துள்ளது.
ஜனவரி 31ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கு 11 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக, மெரினாவில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கான கருத்து கேட்புக் கூட்டம் சென்னையில் ஜனவரி 31ஆம் தேதி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 22 பேர் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்ததாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. 11 பேர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக, சென்னை மெரினா கடலில், ரூ.81 கோடி செலவில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது. இந்த பேனா வடிவ நினைவிடம் முழுவதும் கடல் பகுதியில் அமைய உள்ளது. இதனால் இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பேனா வடிவ நினைவிடம் முழுவதும் கடல் பகுதியில் அமைய இருப்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி அனுமதி பெற வேண்டியது அவசியம். இதற்காக அனுமதி கோரி பொதுப்பணித் துறை, மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.
அதைப் பரிசீலித்த ஆணையம், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. பின்னா், தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவது அவசியம் என தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.