சுற்றுலா கப்பல் தூத்துக்குடி வஉசி துறைமுகம் வருகை
பிரான்ஸில் இருந்து சுற்றுலா கப்பல் 698 வெளிநாட்டு பயணிகளுடன் தூத்துக்குடிக்கு இன்று காலை வந்தடைந்தது.
தூத்துக்குடி: பிரான்ஸில் இருந்து சுற்றுலா கப்பல் 698 வெளிநாட்டு பயணிகளுடன் தூத்துக்குடிக்கு இன்று காலை வந்தடைந்தது.
பகமாஸ் நாட்டைச் சேர்ந்த அமிரா பயணிகள் கப்பல், கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிரான்ஸில் இருந்து புறப்பட்டது. 672 அடி நீளம், 92 அடி உயரம் கொண்ட இந்த கப்பலில் 13 அடுக்குகள் உள்ளன.
இந்தக் கப்பலில் 413 அறைகள், நீச்சல் குளம், நூலகம், பூங்கா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 125 நாட்கள் சுற்றுலா மேற்கொண்டு வரும் 698 பயணிகள் மற்றும் மாலுமிகள் உள்பட 386 பணியாளர்களுடன் கொச்சி துறைமுகம் வந்து பின்னர் அங்கிருந்து இன்று காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி வந்தடைந்தது.
தூத்துக்குடி துறைமுகம் வந்த சுற்றுலா பயணிகளுக்கு தமிழர்களின் முறைப்படி மங்கள வாத்தியம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பொய்க்கால் மாடு, கரகாட்டம், மேளதாளம் வழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிடுவதற்காக அவர்கள் பேருந்தில் சென்றனர்.
இன்று தூத்துக்குடி உள்ள பனிமய மாதா ஆலயம், உப்பளம், திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில், ஊசி கோபுரம், சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளார். பின்னர் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மாலை கொழும்பு புறப்படுகின்றனர்.