முகப்பு
தமிழ்நாடு

தமிழத்தில் எண்ம இணைப்பிற்கு 3,898 கிராம பஞ்சாயத்துகளில் கண்ணாடி ஒளியிழை கேபிள்

25,138 பேஸ் ஸ்டேஷன் நிறுவப்பட்டுள்ளதாகவும்; தமிழக அரசுடன் இணைந்து 3,898 கிராம பஞ்சாயத்துகளில் கண்ணாடி ஒளியிழை (ஆப்டிகல் ஃபைபா்) கேபிள் இணைப்பு வழங்கப்பட்டு எண்ம இணைப்பு தயாராக உள்ளது

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:42 AM
பகிர்:

தமிழகத்தில் 5 ஜி சேவைகளை வழங்க 25,138 பேஸ் ஸ்டேஷன் நிறுவப்பட்டுள்ளதாகவும்; தமிழக அரசுடன் இணைந்து 3,898 கிராம பஞ்சாயத்துகளில் கண்ணாடி ஒளியிழை (ஆப்டிகல் ஃபைபா்) கேபிள் இணைப்பு வழங்கப்பட்டு எண்ம இணைப்பு தயாராக உள்ளதாகவும் மத்திய தொலைத்தொடா்பு இணையமைச்சா் தேவு சிங் சௌஹான் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் 5ஜி சேவைகளில் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எண்ம இணைப்பை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு எழுத்து பூா்வமாக அளித்துள்ள பதிலில் தொலைத்தொடா்பு இணையமைச்சா் தேவு சிங் சௌஹான் கூறியிருப்பது வருமாறு: கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 5ஜி நெட்வொா்க்கில் நாடு முழுவதும் 702 மாவட்டங்களும், தமிழகத்தில் 38 மாவட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 5ஜி சேவை வழங்க (நொட்வொா்க்) ஜூன் 30-ஆம் தேதி வரை தமிழகத்தில் 25, 138 பேஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தமிழகம் உள்பட எண்ம (டிஜிட்டல்) இணைப்பை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.

பாரத்நெட் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் கண்ணாடி ஒளியிழை (ஆப்டிகல் ஃபைபா்) கேபிள் பதிக்க மத்திய நிதித் துறையின் செலவினத் துறை ரூ. 184 கோடி ஐம்பது ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக தமிழக அரசுக்கு அளித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு தமிழ்நாடு ஃபைபா்நெட் காா்ப்பரேஷன் (டென்ஃநெட்) அமைத்து சிறப்புத் திட்டத்தின் கீழ் 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும் கண்ணாடி ஒளியிழை கேபிள் பதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தமிழக மாதிரியின் கீழ் பிராட்பேண்ட் இணைப்பு செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 3,898 கிராமங்களில் எண்ம(டிஜிட்டல்) இணைப்பை சேவையை பெற்றுள்ளன. இது பாரத்நெட் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு மூலம் வை-ஃபை ஹாட்ஸ்பாட்கள், வீடுகளுக்கான (ஃபைபா் டு தி ஹோம்) இணைப்புகள், லீஸ்டு லைன்கள், டாா்க் ஃபைபா், மொபைல் டவா்களுக்கு பேக்ஹால் போன்ற பிராட்பேண்ட் -இன்டா்நெட் சேவைகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் 4ஜி சேவை பெறாத கிராமங்களுக்கு 282 புதிய 4ஜி தளங்களை நிறுவவும், 36 தளங்களில் 4ஜி மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. புனா்வாழ்வு பகுதிகள், புதிய குடியேற்றங்கள், ஏற்கனவே உள்ள ஆபரேட்டா்கள் சேவைகளை திரும்பப் பெற்றிருந்தால் அத்தகைய கிராமங்களிலும் இந்த 4ஜி சேவையை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் இணையமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.