முகப்பு
தமிழ்நாடு

தருமபுரத்தில் வைகாசி பெருவிழா திருத்தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்த ஆதீனகர்த்தர்!

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 8 ஜூன் 2023, 11:22 am IST
பகிர்:

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (ஜூன் 8) நடைபெற்றது. தருமபுரம் ஆதீனகர்த்தர் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. 

இங்கு 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. 

Advertisement

Advertisement

நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர். அதனை அடுத்து தீபாராதனைக்குப் பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தருமபுரம் ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதினம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு மேற்கொண்டார். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை காலை, முந்தைய ஆதீனங்களின் ஐக்கிய கோயில்களான குருமூர்த்தங்களுக்கு தற்போதைய ஆதினம் நாற்காலி பல்லக்கில் செல்லும் நிகழ்ச்சியும், நாளை மறுதினம் தற்போதைய ஆதீனத்தை பக்தர்கள் சிவிகைப் பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்லும் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசமும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.