உத்தமபாளையம்: தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை பிடிபட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்த தடையை வனத்துறையினர் நீக்கி உத்தரவிட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை உள்ளிட்ட 7 மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள தேயிலை தோட்டங்கள் , நீர் நிலைகளை ரசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மேகமலைக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக அரிக்கொம்பன் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு கருதி அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், அரிக்கொம்பன் யானையை கடந்த 5-ஆம் தேதி சின்ன ஓவுலாபுரம் வனப் பகுதியில் பிடித்த வனத் துறையினா், திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு வனப் பகுதிக்கு கொண்டு சென்றனா்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் பராமரிப்புப் பணிகளைச் செய்த வனச் சரகத்தினா், புதன்கிழமை முதல் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதாக அறிவித்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்தனா்.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பின்னர் மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதையடுத்து மேகமலை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர்.