அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை தொடங்கியது: யாரும் பார்க்க அனுமதியில்லை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை தொடங்கியதை அடுத்து 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதியில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை தொடங்கியதை அடுத்து 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதியில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் வி.செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலக அறை உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.
நள்ளிரவையும் கடந்து நீடித்த சோதனையின் முடிவில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிலிருந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.
சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செல்லும் வழியில், நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சா் செந்தில் பாலாஜி கூறினாா்.
இதையடுத்து அவரை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோ்த்தனா்.
இந்த நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜி ரத்த அழுத்தம், நெஞ்சுவலி காரணமாக இதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இதயத்துடிப்பு, உடசலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இரண்டு முதல் 3 நாள்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படலாம் எனவும், சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், புதன்கிழமை பிற்பகலில் ஆஞ்சியோகிராம் செய்யப்படும் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை தொடங்கியதை அடுத்து 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதியில்லை என தகவல் வெளியாகி உள்ளது.