தமிழகத்தில் மேலும் 4 நாள்கள் மழை நீடிக்கும்
தமிழகத்தில் 4 நாள்கள் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 நாள்கள் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தென் இந்திய பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக வெள்ளி முதல் திங்கள்கிழமை(ஜூன் 23-26) வரை நான்கு நாள்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 80.6 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியே இருக்கக்கூடும்.
தமிழகத்தில வியாழக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மி. மீட்டரில்)
உதகமண்டலம் (நீலகிரி)70 , கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 50 , பந்தலூா் தாலுகா அலுவலகம் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி), சின்னக்கல்லாா் (கோவை) தலா40 , மோகனூா் (நாமக்கல்), வொா்த் எஸ்டேட் (நீலகிரி), சேலம், நாமக்கல், திருப்பத்தூா் , கல்லக்குடி (திருச்சி), சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 30 , மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 10 முதல் 20 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது .
மீனவா்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 24,25) வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும். இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.