திருநெல்வேலி: தமிழகத்தில் சிதிலமடைந்த கோயில்களை அரசு சீரமைக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருநெல்வேலியில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான கோயில்கள் சிதிலமடைந்துள்ளன. வருவாய் அடிப்படையில் கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை தரம் பிரிக்கிறது. இப்போது ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பணமே பிரதானமாக இருக்கிறது. அது தவறான முடிவு. கோயில்களை கார்ப்பரேட் வியாபார நிறுவனம் போன்று மாற்றுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள நாணல்காடு பகுதியில் திருகண்டீஸ்வர் - சிவகாமி அம்பாள் ஆலயம் சிதிலமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. அதை உடனடியாக சீரமைத்து பேணி பாதுகாக்க வேண்டும். அந்தக் கோயிலின் கருவறையை ஆய்வு செய்தபோது, அது பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது என தெரியவருகிறது.
இந்து சமய அறநிலையத் துறையினர் கோயில்களை வருமானக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். அர்ச்சகர்களுக்கு போதிய ஊதியம் வழங்குவதில்லை. இதனால் வரக்கூடிய காலங்களில் 28 ஆயிரம் கோயில்களில் அர்ச்சகர் இல்லாத நிலை ஏற்படும். தமிழகத்தில் 165-க்கும் மேற்பட்ட கோயில்கள் சிதிலமடைந்துள்ளன. அதை சீரமைக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.
இதையும் படிக்க: திருமண நாளன்று நேர்ந்த சோகம்! பேருந்து மோதி கணவன், மனைவி பலி!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.