தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது என்று பிகார் குழு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர், அவர்களுக்கு போதிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கும், யாரும் வதந்திகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையும் எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படிக்க | பாஜக மாநிலச் செயலாளர் அதிமுகவில் இணைந்தார்!
இதனிடையே, புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய, பிகார் அதிகாரிகள் குழு தமிழகத்திற்கு வந்து கோவை, திருப்பூர், சென்னை ஆகிய இடங்களில் கடந்த சில தினங்களாக ஆய்வு செய்தது.
இதன்பின்னர் பிகார் குழுவினர் இன்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிகார் குழுவைச் சேர்ந்த பாலமுருகன், தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை, சென்னையில் பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளோம். பல இடங்களில் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கருத்து கேட்டோம்.
பிகாரிலிருந்து 30 ஆண்டுகள், 16 ஆண்டுகளாக பணிபுரிபவர்களும் உள்ளனர். பிகாரில் இருந்து இங்கு வந்து தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. எங்கள் குழு சார்பாகவும் பிகார் அரசு சார்பாகவும் தமிழ்நாடு அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்' என்று தெரிவித்தார்.