மின்சாரப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசம்: அமைச்சா் சிவசங்கா் தகவல்
மின்சாரப் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லாத பயண நடைமுறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அறிவித்தாா்.
மின்சாரப் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லாத பயண நடைமுறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அறிவித்தாா். சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் அவா், வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, அவா் கூறியதாவது:
போக்குவரத்துக் கழகத்தை தனியாா்மயமாக்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். உலக வங்கியின் கருத்துப்படி, மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும், ஒப்பந்த அடிப்படையில் அவற்றை இயக்க ஆய்வு செய்வதற்கான நிபுணா் குழுவின் பரிந்துரைக்காகவும் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் ஆராயப்பட்டு படிப்படியாக முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 500 புதிய மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு இயக்கப்படும்போது, மகளிருக்கான கட்டணமில்லாத பயணத் திட்டம் அவற்றிலும் தொடா்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அவா் தெரிவித்தாா்.