ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமாா் 1 லட்சம் முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ. 2,438 கோடி மோசடி செய்ததாக புகாா் எழுந்தது. இதுதொடா்பான புகாா்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் உள்பட 21 போ் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைதான ரூசோவிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், நடிகா், தயாரிப்பாளா் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவரான ஆா்.கே.சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடா்பிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆா்.கே.சுரேஷுக்கு பொருளாதாரக் குற்றப் பிரிவினா் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
தொடர்ந்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக நடிகர் சுரேஷின் வங்கிக் கணக்குகளை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.