ஓ.பன்னீர்செல்வம் - டி.டி.வி. தினகரன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இன்று (மே 8) இரவு 7 மணியளவில் நேரில் சென்று சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் - பண்ருட்டி ராமச்சந்திரன் - டி.டி.வி. தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தொண்டர்கள் நலனுக்காக டிடிவி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
கடந்தகாலங்களை பேசினால் பேதங்கள் வருத்தங்கள் உண்டாகும், இனி எதிர்காலத்தைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டும். கடந்த காலங்களை மறந்துவிட்டு ஒன்றிணைந்துள்ளோம்.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அதிமுகவின் எதிர்காலம் கருதி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.