செல்போனில் சார்ஜ் போட்டுக் கொண்டு பேச்சு: மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு
சென்னை வண்ணாரப்பேட்டையில் கைப்பேசியை சார்ஜ் போட்டுக் கொண்டு பேசியபோது, மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் கைப்பேசியை சார்ஜ் போட்டுக் கொண்டு பேசியபோது, மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பழைய வண்ணாரப்பேட்டை கெனால் தெருவைச் சேர்ந்தவர் க.காமராஜ் (22). இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், காமராஜ், ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்த பின்னர் மெரீனா கடற்கரைக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து நள்ளிரவு வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார். வீட்டில் அவர்,செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு படுத்து தூங்கியுள்ளார்.
Advertisement
திங்கள்கிழமை அதிகாலை அவர் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. உடனே அவர், சார்ஜில் இருந்த செல்போனை எடுத்து பேசியுள்ளார். அப்போது செல்போன் சார்ஜர் வயரில் மின்கசிவு இருந்ததினால், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் அலறியப்படி காமராஜ் கீழே விழுந்தார். காமராஜ் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வண்ணாரப்பேட்டை போலீஸார், அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு மின்சாரம் பாய்ந்து காமராஜ் இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே அவர் சடலத்தை கைப்பற்றிய போலீஸார், உடல் கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.