மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் பலியான சம்பவத்தில் 2 காவல் ஆய்வாளர்களை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய சிலருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அதில் 6 பேர் மயக்கமடைந்த நிலையில் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடனே எக்கியார் குப்பத்திற்கு விரைந்த போலீசார் பாதிக்கப்பட்ட மேலும் 10க்கும் மேற்பட்டோரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.
மேலும் முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 10க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கள்ளச்சாரயம் அருந்தி 3 பேர் பலியான சம்பவத்தில் கள்ளச்சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மரக்காணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.