மருமகளைக் கத்தியால் குத்திக் கொன்ற மாமனார் கைது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட சொத்து தகராறில் மருமகளைக் கத்தியால் குத்திக் கொன்ற மாமனாரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட சொத்து தகராறில் மருமகளைக் கத்தியால் குத்திக் கொன்ற மாமனாரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (85). இவா் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ராஜேஷ்கண்ணா தனது மனைவி பிரேமா மற்றும் மகன்களுடன் எதிர் வீட்டில் வசித்து வருகிறார். ராஜேஷ் கண்ணா மாற்றுத்திறனாளி என்பதால், பிரேமா மாவு அரைக்கும் இயந்திரம் வைத்து தொழில் நடத்தி வந்தார்.
இதனிடையே, பிரேமாவுக்கும் சண்முகவேலுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சண்முகவேல் வீட்டுக்கு பிரேமா செவ்வாய்க்கிழமை காலை சென்று சொத்தை பிரித்து தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பிரேமாவின் பின் கழுத்தில் சண்முகவேல் கத்தியால் குத்தினார். இதனால் பலத்த காயமடைந்த பிரேமா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் சண்முகவேல் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இது குறித்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து சண்முகவேலை கைது செய்தனர்.