அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி டிடிவி தினகரன் இன்று (நவம்.17) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
“அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. ஏழை, எளிய மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் தேர்வுக் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணமாக தாள் ஒன்றுக்கு 150 ரூபாய் கட்டணமாக பெறப்பட்டு வந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி தாள் ஒன்றுக்கு கட்டணம் 225 ரூபாயாகவும், பட்டயப் படிப்புக்கான சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
செமஸ்டர் ஒன்றுக்கு 9 தாள்கள் எழுத வேண்டியிருக்கும் நிலையில் ஏற்கனவே கட்டி வந்த தேர்வுக் கட்டணத்தை விட தற்போது கூடுதலாக 2,000 ரூபாய் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தேர்வுக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்விக் கட்டணத்தையே செலுத்த சிரமப்படும் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.