ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 27 பேருடன் 5 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தபால் அலுவலம் முன்பு புதன்கிழமை மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதில், 3,500 மீனவர்கள் மற்றும் சார் தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்று படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 9 பேர் மருத்துவமனையில் அனுமதி
இலங்கை கடற்படையினர் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக நடைபெறுகிறது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி ராமேசுவரம் தபால் அலுவலகம் முன்பு அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் மீனவ சங்க தலைவர் என்.ஜே.போஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ சங்கத்தலைவர்கள் ஜேசுராஜா, சகாயம், எமரிட், லே வீன் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.