முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி இல்லை: பிரேமலதா பேட்டி

தமிழ்நாட்டில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:11 AM
பிரேமலதா விஜயகாந்த்(கோப்புப்படம்)
பகிர்:

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, தமிழ்நாட்டில் எந்தப் பெண்ணும் எங்களுக்கு மாதம் ரூ. ஆயிரம் கொடுங்கள் என்று கேட்கவே இல்லை. தங்களின் தேர்தல் ஆதாயத்துக்காக திமுக அப்படியொரு வாக்குறுதியைக் கொடுத்தது. அப்போது அனைத்துப் பெண்களுக்கும் வழங்கப்படும் என்றார்கள். தற்போது தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் தான் என்கிறார்கள். என்ன நினைத்து அவர்கள் இத்திட்டத்தைக் கொண்டு வந்தார்களோ அதற்கு எதிர்மறையாகத்தான் போய் முடியும். பெரும்பாலான பெண்களுக்கு இதன் பலன் கிடைக்கவில்லை.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இப்போது தமிழ்நாட்டில் இல்லை. எல்லோரும் பிரிந்து கிடக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் இருக்கிறது. நிச்சயம் ஜனவரியில் விஜயகாந்த் நல்ல கூட்டணியை அறிவிப்பார். பொருத்திருந்து பாருங்கள்.

காவிரி நீர் விவகாரம், கச்சத் தீவு விவகாரம், நதிகள் இணைப்பு போன்ற நீண்டகால பிரச்னைகளுக்கு யாருமே தீர்வைத் தரவில்லை. 

டாஸ்மாக் கடையை ஒரே நாளில் மூட முடியாது என்பது உண்மைதான். அதேநேரத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதற்கும் எந்த சிறு நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், போதையில்லா தமிழ்நாடு என முதல்வர் அடிக்கடி சொல்லி வருகிறார்.

தொடர்ந்து செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தே வருகின்றன. அவர் அமைச்சராக இருக்கவே முடியாது. ஆனால், முதல்வரின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக அவர் இருப்பதால் அமைச்சராகத் தொடர்ந்து வருகிறார் என்று பிரேமலதா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.