முகப்பு
தமிழ்நாடு

மீனவர்கள் கைது: மத்திய இணையமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர்  வி. முரளிதரனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தினை, டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் நேரில் அளித்தனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:19 PM
மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தினை, டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் நேரில் அளித்தனர்.
பகிர்:

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர்  வி. முரளிதரனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தினை, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் நேரில் அளித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரியும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளைத் திரும்ப வழங்கிடக் கோரியும், இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை மத்திய அரசு விரைந்து காண வேண்டுமென்று வலியுறுத்தியும், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி. முரளிதரனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

முதல்வர்  மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவ சங்கத்தைச் சார்ந்த என்.ஜே. போஸ், பி. சேசுராஜா, ஆர். சகாயம் ஆகியோருடன் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரனை இன்று (அக்.31) நேரில் சந்தித்து, முதல்வர் எழுதிய கடிதத்தினை வழங்கினார். 

முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த சில மாதங்களாக இதுபோன்று தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் பெருமளவில் அதிகரித்து வருவதாகக் கவலைபடத் தெரிவித்துள்ளார்.  குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் IND-TN-10-MM-860, IND-TN-10-MM-985, IND-TN-10-MM-915, IND-TN-10-MM-717 மற்றும் IND-TN-10-MM-717 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 28.10.2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நமது மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள நிலையில், அவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது மீனவ சமூகத்தினரிடையே பெரும் துயரத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியிருப்பதை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நன்கு அறிவார் எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர், 2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடையின்றி தொடர்வதாக வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், எவ்வித காலதாமமுமின்றி, உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள முதல்வர், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரனை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தினைப் பெற்றுக் கொண்டு, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்த  மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரன், இதுகுறித்து முதல்வர் கடிதம் ஏற்கெனவே தங்களது துறைக்கு வந்துவிட்டதாகவும், அதனடிப்படையில் உரிய நடவடிக்கை ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினரிடம் தெரிவித்துள்ளதோடு, இலங்கை அதிகாரிகளுடன் இதுதொடர்பாக மத்திய அரசின் சார்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →