முகப்பு
தமிழ்நாடு

வரதட்சிணை கொடுமை புகார்: மேட்டூர் பாமக எம்எல்ஏவிடம் விசாரணை

மருமகளிடம் வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேட்டூர் பாமக எம்எல்ஏவிடம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:52 AM
மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம்
பகிர்:

சேலம்: மருமகளிடம் வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேட்டூர் பாமக எம்எல்ஏவிடம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சேலம் மாநகர் சூரமங்கலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோலியா (24). இவருக்கும் சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாமகவை சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கருக்கும் கடந்த 2019 ம் வருடம் திருமணம் நடந்தது.

தற்போது இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சங்கர் அவரது மனைவி மனோலியாவை தகாத வார்த்தைகளால் பேசியும், அடித்தும் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை பெற்றோர் கண்டிக்காமல் அவர்களும், மனோலியாவை இழிவாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் மனோலியா சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். தனது கணவர் சங்கர் மற்றும் மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் கலைவாணி ஆகியோர் தன்னை வரதட்சிணை பணம் கேட்டு கொடுமை செய்து வந்ததாக கூறி உள்ளார்.

இந்த புகாரின்  அடிப்படையில் போலீசார் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் அவரது மனைவி பேபி, மகன் சங்கர், மகள் கலைவாணி,  ஆகிய 4 பேர் மீது கொலை முயற்சி, ஆபாசமாக தீட்டுதல், பெண்கள் மீதான வன்கொடுமை, வரதட்சிணை கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் நேரில் ஆஜராக சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் சம்மன் அனுப்பியது. தொடர்ந்து, காவல் நிலையத்தில் விசாரணைக்காக சதாசிவம் ஆஜராகியுள்ளார்.

மேலும், சதாசிவம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு காவல்துறை தரப்பில் கடிதம் அனுப்பப்படவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →