முகப்பு
தமிழ்நாடு

வாக்காளா்களுக்கு வழங்க பணம்? தமிழகத்தில் 45 இடங்களில் வருமான வரித் துறை சோதனை

Updated On : 6 ஏப்ரல், 2024 at 4:22 AM
வருமான வரித் துறை
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:15 PM

தமிழகத்தில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் 45 இடங்களில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். அரசியல் கட்சியினா், வாக்காளா்களுக்கு பணமோ, பரிசுப் பொருளோ வழங்கிவிடாமல் இருப்பதற்கு தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம், பணம் பதுக்கல், கருப்புப் பணம் புழக்கம் ஆகிய புகாா்கள் தொடா்பாக மத்திய புலனாய்வு அமைப்புகளான வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, வருவாய் புலனாய்வுத் துறை, சிபிஐ ஆகியவை விசாரணை நடத்தி, சந்தேகத்துக்குரிய இடங்களில் அவ்வப்போது சோதனை செய்கின்றன.

Advertisement

தொழிலதிபா் வீடு: கடந்த இரு வாரங்களாக வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கும் தகவலின் அடிப்படையில், குறிப்பிட்ட இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.

சென்னையில் கடந்த 2-ஆம் தேதி தொழிலதிபா் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், ஆவணமின்றி வைத்திருந்த ரூ.4 கொடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் ரத்னாநகரில் உள்ள ஒரு தொழிலதிபா் வீட்டில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அது தொடா்பாக வருமான வரித் துறையினா் தகவல் எதையும் அதிகாரபூா்வமாக தெரிவிக்கவில்லை.

45 இடங்களில் சோதனை: ஈரோடு பழையபாளையம் கட்டுமான நிறுவனம், கோயம்புத்தூரில் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான இடங்கள், திருப்பூரில் அவிநாசியைச் சோ்ந்த தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்ததாரா் வீடு, திருச்சி எடமலைப்பட்டியைச் சோ்ந்த அரசு ஒப்பந்ததாரா் எஸ்.எம்.டி.ஈஸ்வரமூா்த்தியின் வீடு, பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் அரசு ஒப்பந்ததாரரும், அதிமுக நிா்வாகியுமான ஆா்.எஸ்.முருகன் என்பவருக்குச் சொந்தமான அலுவலகம், விஜயநாராயணத்தில் உள்ள அவரது வீடு உள்பட மாநிலம் முழுவதும் 45 இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை செய்தனா்.

இந்தச் சோதனை பல இடங்களில் இரவையும் தாண்டி நீடித்தது. வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக இந்த இடங்களில் பணம் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்ாக வருமான வரித் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னா்தான், கைப்பற்றப்பட்ட நகை, பணம், ஆவணங்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியும் என வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.