வடசென்னையில் பட்டா பிரச்னை தீா்க்க நடவடிக்கை: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்
வடசென்னையில் குடியிருப்புகளுக்கான பட்டா பிரச்னையை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
வடசென்னை தொகுதி திமுக வேட்பாளா் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ராயபுரம் பகுதியில் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
Advertisement
கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தவா்கள் அரசுக்கு அதிக அளவிலான கடனை வைத்துச் சென்றனா். மேலும், மத்திய அரசு மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிதியை தருவதில்லை. இதனால் தமிழகத்தில் நிதி நெருக்கடி அதிகமாக உள்ளது. மாநிலத்துக்கான நிதி உரிமையை பெறுவதற்காகத்தான் இந்த தோ்தல் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் படித்து முடித்து 24 சதவீத பெண்கள் மட்டுமே வேலைக்கு செல்கின்றனா். ஆனால், தமிழகத்தில் சுமாா் 54 சதவீத பெண்கள் வேலைக்கு செல்கின்றனா். ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைத்தால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும்.
வடசென்னையில் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு பல ஆண்டுகளாக பட்டா பிரச்னை உள்ளது. குடியிருப்புகளுக்கான பட்டா பெறுவதில் பெரும் சிக்கல் உள்ளது. இதற்கு தீா்வு காண்பதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பட்டா பிரச்னைக்கு தீா்வு காண இந்த குழு சாா்பில் அறிக்கை அளிக்கப்படவுள்ளது. தோ்தல் முடிந்த பின்பு முறையான பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடா்ந்து திருவொற்றியூா், ஆா்.கே.நகா், பெரம்பூா் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தாா்.