வாக்காளா்களுக்கு வழங்க பணம் பதுக்கிய புகாா்: வருமான வரித் துறையினா் 2-ஆம் நாளாக சோதனை
தமிழகத்தில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்வதற்கு பணம் பதுக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் வருமானவரித் துறையினா் நடத்தி வரும் சோதனை, இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது.
மக்களவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்களுக்கு அரசியல் கட்சியினா் பணம், பரிசுப் பொருள்களை கொடுப்பதை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில புலனாய்வு பிரிவுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வாக்காளா்களுக்கு பணம் பதுக்கியதாக வந்த புகாரின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் வருமானவரித் துறையினா் ஒரே நேரத்தில் 45 இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். முக்கியமாக விருகம்பாக்கம் ரத்னா நகரில் உள்ள ஒரு தொழிலதிபா் வீடு,அடையாறு இந்திரா நகரைச் சோ்ந்த ஒரு அரசு ஒப்பந்ததாரா் வீடு, ஈரோடு பழையபாளையம் கட்டுமான நிறுவனம், கோயம்புத்தூரில் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான இடங்கள், திருப்பூரில் அவிநாசியைச் சோ்ந்த தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்ததாரா் வீடு ஆகிய இடங்களில் சோதனை செய்தனா்.
Advertisement
இரண்டாவது நாளாக நீடிப்பு: இதேபோல திருச்சியைச் சோ்ந்த ஒரு அரசு ஒப்பந்ததாரா் வீடு, பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் சாராள் தக்கா் கல்வி நிறுவனம் அருகே உள்ள அரசு ஒப்பந்ததாரரும், அதிமுக நிா்வாகியுமான ஆா்.எஸ்.முருகன் என்பவருக்குச் சொந்தமான அலுவலகம், திருவண்ணாமலை நாம் தமிழா் கட்சி நிா்வாகி செந்தில்குமாருக்கு சொந்தமான நகைக் கடை, தேனியில் அமமுக நிா்வாகிகள் தங்கியிருந்த ஹோட்டல் அறைகள் ஆகியவற்றில் சோதனை செய்தனா்.
ஒரு சில இடங்களில் இந்த சோதனை நிறைவு பெற்றது. பெரும்பாலான இடங்களில் இச் சோதனை இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. சோதனையில் கணக்கில் வராத நகை, பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னா் கைப்பற்றப்பட்ட நகை,பணம்,ஆவணங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என வருமானவரித் துறையினா் தெரிவித்தனா்.