வெப்ப அலை: சுகாதாரப் பணியாளா்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்
தமிழகத்தில் வெப்ப அலை அதிகரித்து வரும் நிலையில், களப் பணியாற்றும் சுகாதாரத் துறையினா் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள், களப் பணியாளா்களின் தேவைக்காக போதிய எண்ணிக்கையில் உப்பு - சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்கெட்டுகள் உள்ளன. அவை காலியாகும்பட்சத்தில் உடனுக்குடன் நிரப்புமாறு சுகாதார அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
மற்றொருபுறம், மக்களைத் தேடி மருத்துவம், மக்களைத் தேடி ஆய்வகம், காசநோய் தடுப்பு உள்ளிட்ட திட்டங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளா்கள் அனைவரும் வெப்பம் தீவிரமாக இருக்கும்போது நேரடி வெயிலில் பணியாற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கேற்ற வகையில் பணி நேரத்தை மாற்றிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாக பொதுமக்களுக்கு கோடை கால வெப்ப பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.