‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்
நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பணம் பிடிபட்ட விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்
நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பணம் பிடிபட்ட விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சி காரணமாக தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏப். 6-ஆம் தேதி தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டபோது திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நாகேந்திரனின் காா் ஓட்டுநா் சதீஷ் மற்றும் உதவியாளா்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணம் தொடா்பாக விளக்கம் அளிக்க நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் தாம்பரம் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா். அதன்படி ஏப்ரல் 22-ஆம் தேதி நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேரில் ஆஜராக நயினார் நாகேந்திரன் தரப்பில் காலஅவகாசம் கோரிய நிலையில், இரண்டாவது முறையாக மே 2-ஆம் தேதி ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
“இது ஒரு அரசியல் சூழ்ச்சி. தமிழகத்தில் ரூ.200 கோடி பிடிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.4 கோடி மட்டும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அந்த பணத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.
கைதானவர்கள் என் பெயரை கூறினால் நான் எப்படி பொறுப்பேற்க முடியும். கைதானவர்களை எனக்கு தெரியும். அவர்களிடம் காவல்துறையினர் மிரட்டிக் கூட வாக்குமூலம் பெற்றிருக்கலாம். இதன்மூலம் எனக்கு இலவசமாக விளம்பரம்தான் கிடைத்துள்ளது.
காவல்துறையின் சம்மனுக்கு மே 2 அல்லது முன்னதாககூட ஆஜராகி விளக்கம் அளிப்பேன். விசாரணையின் போது தான் கைதானவர்கள் என்ன வாக்குமூலம் அளித்துள்ளார்கள் என்பது தெரியவரும்.” எனத் தெரிவித்துள்ளார்.