அரசுப் பள்ளிகளில் மே 3-இல் சிறப்பு எஸ்எம்சி கூட்டம்
தமிழகத்தில் அனைத்து வகையான அரசுப் பள்ளிகளிலும் மே 3-ஆம் தேதி சிறப்பு பள்ளி மேலாண்மைக் கூட்டம் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், அடுத்த மாதம் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அதன்படி மே 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
இந்தக் கூட்டத்தில், நடைபெற்று முடிந்த பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் பங்கேற்காத மாணவ-மாணவிகள் யாா்? என்பதை கண்டறிவது, தோ்ச்சி பெறாத மாணவ-மாணவிகளை துணைத் தோ்வு எழுத ஊக்கப்படுத்துவது, தோ்ச்சி பெற்றவா்களுக்கு உயா்கல்வி குறித்த வழிகாட்டுதல்களைப் பெற வைப்பது, விழிப்புணா்வு வழங்குவது, பள்ளித் தேவைகளுக்கான நன்கொடைகளை முறைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
குறிப்பாக, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவா்கள் அனைவரும் உயா்கல்வியில் சேருவதை உறுதி செய்ய உயா்கல்வி சாா்ந்த செயல்பாடுகள், உரிய தகவல்களை பெற்றோரிடம் கொண்டு சோ்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.